சென்னை: தமிழகம் முழுவதும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வின் (எஸ்பிஐ) பணம் நிரப்பும் வசதி கொண்ட ஏடிஎம் இயந்திரங்களில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். மொத்தம் 19 ஏடிஎம் இயந்திரங்களில் 48 லட்சம் ரூபாய் வரை நூதன முறையில் கொள்ளையடித்து உள்ளனர். இம்மாதம் 17 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களில் பணம் திருடப்பட்டு உள்ளது.
சென்னையில் மட்டும் ஏழு ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை நிகழ்ந்து உள்ளது. ஜப்பானியத் தொழில்நுட்பத்துடன் இயங்கும் ரொக்கம் நிரப்பும் (கேஷ் டெபாசிட்) வசதியுடன் கூடிய இயந்திரங்களைக் குறிவைத்து கொள்ளைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' தெரிவித்துள்ளது.
ஜூன் 19ஆம் தேதி சென்னை வடபழனியிலுள்ள ஓர் ஏடிஎம் இயந்திரத்தை நோக்கி இருவர் வந்ததும் அவர்கள் நூதன முறையில் மூன்று முறை ரூ.69,000 வரை பணம் எடுத்ததும் அங்கிருந்த கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகி உள்ளது.
அவர்களில் ஒருவர் தலைக்கவசம் அணிந்துள்ளார். ஏடிஎம் இயந்திரத்தினுள் அட்டையைச் செருகி ரகசிய எண்ணை அழுத்தியதும் பணம் வரும். அந்தப் பணத்தை 20 விநாடிகள் வரை எடுக்காவிட்டால் மீண்டும் அது உள்ளிழுக்கப்பட்டுவிடும்.
அவ்வாறு பணம் மீண்டும் உள்ளே செல்லும்போது அதன் நுழைவாயில் மறைப்பையும் அருகிலுள்ள உணர்கருவியையும் விரல் களால் தடுத்து நிறுத்தியவாறே பணத்தை வெளியே எடுத்துவிட்டால் வங்கிக் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படாது.
சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் அந்தத் தொகை மீண்டும் வரவு வைக்கப்பட்டுவிடும். இந்த ரகசிய முறை மூலம் தொடர்ச்சியாக பணத்தைக் கொள்ளை அடித்துள்ளனர். போலியான முகவரியைக் கொடுத்து எஸ்பிஐ கிளை ஒன்றில் வங்கிக் கணக்கைத் தொடங்கி அந்த வங்கிக் கணக்கின் ஏடிஎம் அட்டை வழியாக பணம் கொள்ளையடிக்கப்பட்டு வந்துள்ளதை அதிகாரிகள் கண்டு
பிடித்துள்ளனர்.
இருவர் பிடிபட்டதாகத் தகவல்
இதற்கிடையே, இந்தக் கொள்ளையில் நான்கு பேர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்களில் இருவர் நேற்றுக் காலை ஹரியானா மாநிலத்தில் பிடிபட்டதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.