சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் போலிசாரும் வனத்
துறையினரும் நேற்று முன்தினம் மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக எடப்பட்டிபுதூரைச் சேர்ந்த விவசாயி முருகேசன், 45, (படம்) என்பவர் தனது நண்பர்கள் மூவருடன் சென்ற மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி போலிசார் சோதனை செய்துள்ளனர்.
அப்போது போலிசாருக்கும் முருகேசனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த போலிஸ்காரர், முருகேசனை லத்தியால் தாக்கியுள்ளார். மயங்கி விழுந்த முருகேசன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரவில் உயிரிழந்தார்.
இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும் ஜெயப்பிரியா, ஜெய பிருந்தா என்னும் மகள்களும் கவிப் பிரியன் என்ற மகனும் உள்ளனர்.
விவசாயியான முருகேசன், இடைய பட்டி-வாழப்பாடி சாலையில் மளிகை மற்றும் பழக்கடைகள் நடத்தி வந்தார்.
முருகேசனை போலிசார் தாக்கியது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி, காவலர் முருகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னொரு காவலரைத் தேடி வருகின்றனர்.
அத்துடன் பெரியசாமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
'மீண்டுமொரு சாத்தான்குளம் சம்பவமா' என பொதுமக்கள் கொந் தளிக்கின்றனர். அதற்கேற்ப, சாத்தான்குளத்தில் போலிசாரால் தாக்கப்பட்டு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த அதே நாளில் (ஜூன் 22) முருகேசன் தாக்கப்பட்டு இறந்துவிட்டார்.

