பாஜகவுக்குள் குமுறல்; விலகல்
திருப்புவனம்: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மேற்கு ஒன்றிய பாஜக தலைவர் பாலமுருகன் தனது பதவியைவிட்டு விலகிஉள்ளார். அத்துடன் இந்த ஒன்றியத்திலுள்ள 59 கிளைகளும் ஒட்டுமொத்தமாகக் கலைக்கப்பட்டன. அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தோல்வியடைந்தார். தோல்விக்கு கட்சி நிர்வாகிகளே காரணம் என அவரது தரப்பில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
'ஒன்றிய அரசு': ஸ்டாலின் விளக்கம்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப் பேரவை யில் உரை நிகழ்த்தியபோது, "'ஒன்றிய அரசு' என்று சொல் வதை ஏதோ சமூகக் குற்றம்போல யாரும் நினைக்கவேண் டாம். அப்படி சிலர் கருதுவது முழுக்க முழுக்க தவறு," என்றார். மேலும் அவர் கூறுகையில், "ஒன்றியம் என்ற வார்த்தையைக் கேட்டு யாரும் மிரளத் தேவையில்லை. அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம், பயன்படுத்திக்கொண்டேயிருப்போம்," என்றார்.
பாலியல்: ஆசிரியர் கைது, நீக்கம்
இராமநாதபுரம்: முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் ஹபீப் முகம்மது, 32. இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் கைபேசி மூலம் ஆபாசமாகப் பேசி பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. அதன் அடிப்படையில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான தடுப்புக்காவல் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் தலைமையிலான குழுவினர் விசாரித்தனர். ஆசிரியர் ஹபீப் முகமது ஜூன் 18ஆம் தேதி, மாணவி ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு செய்திகள் அனுப்பியதும் மறுநாள் அதே மாணவியிடம் பாலுணர்வை தூண்டும் வகையில் பேசி, தொந்தரவு செய்ததும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஹபீப் முகம்மதைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.15 கோடி ஐம்பொன் சிலைகள்
காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பி.புதுப்பட்டியில் மகமாயி அம்மன் கோயில் உள்ளது. இங்கு மகமாயி அம்மன், வீரபத்திரர், விநாயகர், கருப்பசாமி உள்ளிட்ட பத்து ஐம்பொன் சிலைகள் 400 ஆண்டுகள் பழமையானவை என்றும் இதன் மதிப்பு ரூ.15 கோடி இருக்கும் என்றும் தெரி விக்கப்பட்டது. இவற்றை கோயில் பூசாரி தமது வீட்டின் பாதாள அறையில் பாதுகாப்பாக வைத்து பூசை செய்து
வந்தார். இந்நிலையில், கோயில் தக்கார் தேவி என்பவரும் போலிஸ் அதிகாரிகளும் நேற்று முன்தினம் அவரிடமிருந்து பத்து சிலைகளையும் மீட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு அவை கொண்டு செல்லப்பட்டன.

