திருச்சி: திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் கோவிலில் அகிலா என்ற யானை கடந்த 10 ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை குளிப்பதற்காக கோவில் நிர்வாகம் சிறிய நீச்சல் குளம் போன்ற ஒரு பிரம்மாண்டமான குளியல் தொட்டியைக் கட்டித் தந்துள்ளது.
அகிலாவை குளிக்க வைப்பதற்காக ஏற்கெனவே 'ஷவர்' அமைக்கப்பட்டு உள்ள நிலையில், கோவிலுக்குள் உள்ள நாச்சியார் தோப்பு பகுதியில் மூன்றரை லட்சம் ரூபாய் செலவில் 21 அடி நீளம், 21 அடி அகலம், 6.5 அடி ஆழம் கொண்ட குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
12 அடி அகலத்தில் சாய்தள பாதை வசதியுடன் வடிவமைக்கப் பட்டுள்ள இத்தொட்டியில் இரண்டரை அடி ஆழத்துக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு, இதில் நின்றும், படுத்தும், புரண்டும், தண்ணீரை முதுகில் வாரி இரைத்து ஊற்றியும் குளித்து விளையாடி மகிழ்கிறது அகிலா யானை. ஏற்கெனவே, இது நடைபயிற்சி மேற்கொள்ள நீண்ட மண்தரையும் அமைத்து தரப்பட்டுள்ளது. தற்போது கொரோனா காலகட்டமாக உள்ளதால், திருவிழா போன்ற வைபவங்களுக்கு யானை வெளியே செல்லமுடியாத நிலையில், கோவில் வளாகத்திலேயே நடைப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

