திண்டுக்கல்: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திண்டுக்கல்லில் இருந்து தலா 5 கிலோ எடையில் இரண்டு பெரிய வகை மாங்காய் பூட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு பூட்டின் விலை ரூ.10,000 என்று கூறப்படுகிறது.
திண்டுக்கல் என்றாலே பூட்டு தான் நினைவுக்கு வரும். மாங்காய் பூட்டு, மணி பூட்டு, தொட்டி பூட்டு என விதவிதமான பூட்டுகள் இங்கு தயாராகின்றன. பெரிய கதவுகள் கொண்ட பல்வேறு கோவில்களிலும் இங்கு தயாரான பூட்டுகளே இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பூட்டு தயாரிப்பாளர் முருகேசன் (படம்) கூறுகையில், "கடந்த 43 ஆண்டுகளாக பூட்டு தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். கை வேலைப்பாட்டில் தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கும் பூட்டு தயாரித்துக் கொடுத்துள்ளேன். தற்போது திருப்பதி கோவிலுக்காக பித்தளையில், ஐந்து நாள்களாக மாங்காய் பூட்டு தயாரித்துள்ளேன். நலிவடைந்து வரும் பூட்டு தொழி லைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்," என கோரினார்.

