சென்னை: உலகின் ஆகப் பழமையான மொழியான தமிழ் மொழி இந்தியாவுக்குச் சொந்தமானது என்றும் அதை எண்ணி இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிவரும் பிரதமர் திரு மோடி, தமிழ்மொழியை எண்ணி தான் எப்போதும் பெருமிதமும் கர்வமும் கொள்வதாக நேற்றுக் குறிப்பிட்டார்.
"மிகவும் சிறப்பு வாய்ந்த, தொன்மையான தமிழ்மொழியும் தமிழ்க் கலாசாரமும் என் நெஞ்சைவிட்டு என்றுமே அகலாது," என்று பிரதமர் கூறினார்.
சென்னையைச் சேர்ந்த குரு பிரசாத் என்பவர், மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழ் மொழி, தமிழ்க் கலாசாரம், தமிழர்கள் பற்றி தான் இதுநாள்வரை தெரிவித்து வந்திருப்பதை எல்லாம் ஒன்றுதிரட்டி மின்னிலக்கப் புத்தகம் ஒன்றைத் தயாரித்து அதை நமோ (NamoApp) செயலியில் வெளியிட விரும்புவதாகவும் இதற்காக அவரைத் தான் வாழ்த்துவதாகவும் திரு மோடி தெரிவித்துள்ளார்.

