டெல்டா பிளஸ் தொற்று: எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுரை
சென்னை: தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா பிளஸ் கொவிட்-19 கிருமி காரணமாக ஒருவர் மரணமடைந்து விட்டதாகவும் நேற்று வரை ஒன்பது பேர் பாதிக்கப்பட்டதாகவும் அந்த மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் தொற்று தொடர்ந்து குறைகிறது என்றாலும் டெல்டா பிளஸ் கிருமியை மனதில் கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சென்னை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் டெல்டா பிளஸ் கண்டறியப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த மத்திய அரசு, டெல்டா பிளஸ் கிருமித்தொற்றை ஒடுக்குவதற்கு ஆன அனைத்து முயற்சிகளையும் உடனடியாக எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
டெல்டா பிளஸ் தலைதூக்கி உள்ள பகுதிகளில் பரிசோதனைகளையும் துப்புரவு நடவடிக்கைகளையும் தடுப்பூசி இயக்கத்தையும் தீவிரப்படுத்தும்படி அது அறிவுறுத்தி உள்ளது.
டெல்டா பிளஸ் கிருமி வேகமாக தொற்றக்கூடியது என்றும் நுரையீரலில் இறுக்கமாக ஒட்டிக்கொள்ளக்கூடியது என்றும் மருந்துகளுக்கு அவ்வளவு எளிதில் கட்டுப்படாத கிருமி என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வேளையில், சென்னை, மதுரை, கோவை நகரங்களில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையங்களை அமைக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளதாக மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று கூறினார்.
இதனிடையே, சனிக்கிழமைதமிழ்நாட்டில் 170,963 பேருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்களில் 5,415 பேருக்குத் தொற்று இருந்தது தெரியவந்ததாகவும் 24 மணி நேரத்தில் 148 பேர் உயிரிழந்ததாகவும் மாநிலத்தின் நல்வாழ்வுத் துறை அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

