ஈரோடு: ஈரோடு அருகே மாத்திரை சாப்பிட்டு மூவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் நேற்று திடீர் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாயின.
கொரோனா பரிசோதனை எனக்கூறி நச்சு மாத்திரை கொடுத்து அந்த மூவரையும் பக்கத்து வீட்டுக்காரரே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
சென்னிமலை அருகே அம்மாபாளையத்தில் வசித்த மல்லிகா, குப்பம்மாள், தீபா ஆகிய மூன்று மாதர்களும் மாத்திரையைச் சாப்பிட்டு பிறகு உயிர் இழந்தனர்,
அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். மல்லிகாவின் பக்கத்து வீட்டில் வசித்த கல்யாணசுந்தரம் என்பவரே இந்த படுபாதகச் செயலைச் செய்து இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
மல்லிகாவிடம் வாங்கிய ரூ.6.5 லட்சம் கடனைத் திருப்பிக் கேட்டதால் அவரது குடும்பத்திற்கே நஞ்சு கொடுக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
கல்யாணசுந்தரம் ஏற்பாட்டின் பேரில் மல்லிகா குடும்பத்துக்கு நச்சு மாத்திரை கொடுத்த சபரி என்ற கல்லூரி மாணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனக்கு ஊராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கல்யாணசுந்தரம் தன்னை இந்தக் காரியத்தைச் செய்யும்படி கேட்டுக்கொண்டதாக சபரி போலிசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
போலிசார் கல்யாணசுந்தரத்தை தொடர்ந்து விசாரிக்கிறார்கள்.