திருவள்ளூர்: பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அங்கே சொகுசாக இருந்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து, சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புழல் மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.
மணிகண்டனுக்குச் சிறையில் சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சில சிறை அதிகாரிகளின் உடந்தையோடு சைதாப்பேட்டை சிறையில் குளிர் சாதன வசதி, சோபா, கைபேசி, மின்னேற்றி உள்ளிட்ட சொகுசு வசதிகளோடு மணிகண்டன் இருப்பதைக் கண்டுபிடித்து, புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சிறைத்துறையின் உயர் அதிகாரி தலைமையில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் போலிசார் நடத்திய திடீர் சோதனை யில் மணிகண்டனுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மணிகண்டன் நேற்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தனது வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கிவிட்டதாக சென்னை பெசன்ட் நகரில் வசித்து வரும் 'நாடோடிகள்' பட நடிகை சாந்தினி அளித்த புகாரின்பேரில் கடந்த 20ஆம் தேதி முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பெங்களூருவில் வைத்து போலிசார் கைது செய்தனர். இதன்பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

