கோவில்பட்டி: கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என உறுதிபட தெரிவித்த பிறகும், "நான் அந்தக் கட்சிக்குச் செல்வேன், நான் சென்றால்தான் அதிமுகவின் நிலைமை மேம்படும் என சசிகலா தொடர்ந்து சொல்லி வருவது விளையாட்டுத்தனமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது," என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுக பெயரை தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
கோவில்பட்டியில் 'நியூஸ் 18' தொலைக்காட்சிக்கு கடம்பூர் ராஜூ அளித்த பேட்டியில், "சசிகலா ஒரு புதிய கட்சியுடன் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தால் அதை யாரும் தடுக்க முடியாது. அதிமுக என்ற போர்வையில் வரக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து.
"அதிமுகவில் சசிகலாவை ஏற்க மாட்டோம் என்று தீர்மானம் நிறை வேற்றிய பின்னரும்கூட அவர் அதிமுகவுடன் இணைய முயற்சி எடுப்பது அழகல்ல. எந்த அர்த்தத்தில் இப்படி செய்கிறார், அவருக்கு அப்படி என்ன நிர்ப்பந்தம் உள்ளது எனத் தெரியவில்லை.
"அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள், தொண்டர்களிடம் சசிகலா பேசுவதில்லை. அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களிடம் பேசி வருகிறார். விளாத்திகுளத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை," என்றார் கடம்பூர் ராஜூ.

