சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மீண்டும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்து. இதன் காரணமாக, தடுப்பூசி போடும் பணி சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளிலும் நேற்று நிறுத்தப்பட்டன.
இதேபோன்று, ஈரோடு, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம் மாவட்டத்திலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்திருந்தன.
போதிய அளவு தடுப்பூசி வந்தபின்னர், தடுப்பூசி போடுவது குறித்து அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரங்களில் மட்டுமின்றி கிராமங்கள், மலைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக இருந்தாலும் பற்றாக்குறை நிலவி வருவது வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்.
இதற்கிடையே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா சூழலில் தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே மக்கள் உயிர்காக்கும் ஒரே வழியாக உள்ளது. மாநிலத்திற்குத் தேவையான தடுப்பூசி மருந்துகளை வழங்குவதில் மத்திய பாஜக அரசு தொடக்கத்தில் இருந்தே பாரபட்சம் காட்டி வருகிறது. தடுப்பூசி மருந்தை உரிய காலத்தில் வழங்காததால் தடுப்பூசி போடும் பணி தடைபட்டுள்ளது. மத்திய அரசு தமிழக மக்களின் உயிரோடு விளையாடுவது கண்டிக்கதக்கது," என்று கூறியுள்ளார்.

