விழுப்புரம்: அதிமுகவின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்திருந்த புகாரைத் தொடர்ந்து, சசிகலா மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டிவனம் காவல்நிலையத்தில், அண்மையில் சசிகலா மீதும் அவரின் ஆதரவாளர்கள் 500 பேர் மீதும் சி.வி. சண்முகம் புகார் கொடுத்திருந்தார்.
சசிகலாவின் தூண்டுதலின் பேரில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் 500க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களில் இருந்து ஆபாசமான வசைகளோடு மிரட்டல் வருவதாக புகாரில் கூறியிருந்தார்.
கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி விழுப்புரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் ஊடகங்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "கருவாடு மீன் ஆகலாம். ஆனால், சசிகலா ஒருபோதும் அதிமுகவின் உறுப்பினர் ஆகமுடியாது," எனப் பேசியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து 9ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், ரோசனை காவல்நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார் அளித்தார்.
அதில், "நான் சசிகலா குறித்து ஊடகங்களில் கருத்துத் தெரிவித்த நிலையில், சசிகலாவின் அடியாட்கள் கைபேசி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றின் மூலம் ஆபாசமாகவும் அநாகரிகமாகவும் பேசியும் பதிவிட்டும் வருகின்றனர்.
"சசிகலாவின் தூண்டுதலின் பேரில்தான் ஏராளமானோர் எங்கள் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, ரோசனை காவல்துறையினர் சசிகலா உள்பட அடையாளம் தெரியாத 500 பேர் மீது 501(1), 507, 109, 67 IT ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக அறிவித்த சசிகலா, தற்போது தமது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் தினமும் பேசி வருகிறார்.
உடல் பெங்களூரில், உயிர் தமிழகத்தில்
தினந்தோறும் தொண்டர்களிடம் தொலைபேசி வழி பேசி வரும் வி.கே.சசிகலா, தேனியைச் சேர்ந்த கர்ணன் என்பவரிடமும் பேசியுள்ளார். "நான் கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் என் உடல்தான் அங்கு இருந்ததே தவிர என் உயிர் தமிழக மக்களைச் சுற்றியே இருந்தது. தமிழக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நான் சிறையில் செய்யாத பூசையில்லை. மாதக்கணக்கில் விரதமும் இருந்தேன்," என்று பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "கட்சி இப்படி பாழ்பட்டுக் கிடப்பதை இனியும் என்னால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. சொன்னபடி அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தான் நான் ஒதுங்கியிருந்தேன். வெற்றிபெற்றிருந்தால் பெரும் நிம்மதியோடு நானும் இருந்திருப்பேன். அதை செய்யலையே?" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் சசிகலா.

