தூத்துக்குடி: சென்ற திங்கட்கிழமை காலை மாப்பிள்ளையின் கையைப் பிடித்த 22 வயது மணப்பெண் பி. நிஷா அடுத்த சில நிமிடங்களில் பட்டுச் சேலையுடன் கம்புகளை நாலாபக்கமும் சுழன்று சுழற்றி திருமணமத்திற்கு வந்திருந்த விருந்தினர்களை அசத்தி ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.
தூத்துக்குடியில் உள்ள திருக்கோலூர் கிராமத்தில் மணப்பெண்ணின் தற்காப்புக் கலை அரங்கேறியதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' தெரிவித்தது.
இதை, மாப்பிள்ளையை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக செய்யவில்லை. பெண்களுக்கு தற்காப்புக் கலையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவ்வாறு செய்ததாக பி. நிஷா கூறுகிறார்.
அவரை மணந்துகொண்ட 29 வயது ராஜ்குமார் மோசஸ், நிஷாவின் தாயாருடைய சகோதரர். தேமாங்குளம் எனும் பக்கத்து கிராமத்தில் வசித்து வருகிறார்.
நிஷா பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு, சிலம்பம் ஆகிய வற்றை சுழற்றிக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
"சேலை அணிந்து சிலம்பம் ஆடுவது எளிதான காரியமல்ல. ஆனால் எனது கணவரும் எனக்குப் பயிற்சியளித்த மாரியப்பனும் சிலம்பத்தில் மட்டும் கவனம் செலுத்தி ஆடும்படி கூறியிருந்தனர்," என்றார் அவர்.
"சிறு வயதிலேயே சிலம்பம் கற்க வேண்டும் என்பதில் ஆர்வம் இருந்தது. எனது தாயார் மணியும் பெண்கள் பாதுகாப்புக்கு தற்காப்புக் கலைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஊக்கமளித்தார்.
"அதனால் நான் சிலம்பம், ஒயிலாட்டம், சுருள்வாள், களரி ஆகிய கலைகளைக் கற்றுள்ளேன். மாஸ்டர் மாரியப்பனிடம் பயிற்சி பெற்றேன். இந்தப் பாரம்பரிய கலைப்போட்டிகளில் நான் பல்வேறு பரிசுகளும் பெற்று உள்ளேன். திருமண விழாவில் நான் கற்ற மதிப்புமிக்க கலைகளை ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது," என்றார்.
கடந்த ஆண்டு மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் முதல் பரிசையும் திருப்பூரில் மாநில அளவில் நடந்த போட்டியில் 3வது பரிசையும் அவர் வென்றுள்ளார்.
அவரது நண்பர்களும் சக மாணவர்களும் பல்வேறு தற்காப்புக் கலையைக் காட்டி விருந்தினர்களை சுமார் ஒரு மணி நேரம் மகிழ்ச்சி அடைய வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் நடுக்கட்டுன்டான்காடு கிராமத்தைச் சேர்ந்த பெருமாளின் மகள் நிஷா, பி.காம். பட்டதாரி யாவார். போலிஸ் ஆக வேண்டும் என்ற கனவும் அவருக்குள்ளது.
இதற்கிடையே மணப் பெண்ணுக்கு தற்காப்புக் கலைகள் தெரிந்திருப்பதால் மாப்பிள்ளை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சில ஊடகப் பதிவாளர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
ஆனால் அதுபற்றியெல்லாம் தனக்கு கவலையில்லை என்று திரு ராஜ்குமார் கூறியுள்ளார்.

