மதுரை: அதிமுகவை வழிநடத்த சசிகலாவுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஒலிப்பதிவுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
அண்மையில் இது குறித்து பேசிய அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். ஆனால் யார்? யாரிடமோ? போன் போட்டு பேசி அதை சசிகலா காட்சிப்படுத்தி வருகிறார் என்றார்.
"சசிகலா, அதிமுகவில் உறுப்பினர் கூட கிடையாது. அதனால் 10 பேர் என்ன? ஆயிரம் பேரிடம் அவர் பேசினாலும் கவலை இல்லை," என்றும் பழனிசாமி தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சுஜாதா (எ) ஹர்ஷினி சார்பில் 'ஒற்றை தலைமை வழி நடத்த, ஒன்றரை கோடி தொண்டர்களின் துயர் தீர்க்க கட்சியை துரோகிகளிடம் இருந்து காப்பாற்ற வரும் அம்மாவின் மறு உருவமே சின்னம்மா' என்ற வாசகத்துடன் மதுரை திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம், அண்ணாநகர், செல்லூர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார்.
மதுரையில் முதன்முறையாக சசிகலாவிற்கு ஆதரவாக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் சுவரொட்டி ஒட்டியதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் அ.தி.மு.க. மகளிர் அணி புறநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஒட்டியுள்ள சுவரொட்டி களால் தொண்டர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

