கோவை: தடுப்பூசி போடவந்த அதிகாரிகளைக் கண்ட பழங்குடியின மக்கள், ஊசி போட்டுக்கொள்ள மறுத்து மரங்களில் ஏறி பதுங்கினர்.
கோவையில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களுக்கு சுகாதாரப் பணியாளர்கள் நேரில் சென்று தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் பழங்குடியின மக்களோ ஊசி போட்டுக்கொள்ள மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள முள்ளாங்காடு, கல்கொத்திபதி, சர்க்கார் பூரத்திபதி, வெள்ளைபதி உள்ளிட்ட மலைகிராமங்களுக்கு மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடச் சென்றனர்.
அப்போது அங்குள்ள பழங்குடியின மக்கள் அவர்களைக் கண்டதும் ஓட்டம்பிடித்தனர்.
சிலர் தடுப்பூசி அச்சம் காரணமாக அங்குள்ள மரங்களில் ஏறிக் கொண்டு, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய சுகாதார அதிகாரிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கம் அளித்தனர்.
அதன் பின்னர் 600 பேர் வசிக்கும் கிராமத்தில் சுமார் பத்து விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
விரைவில் மற்றவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவார்கள் என எதிர்பார்ப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.