திருச்சுழி: கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் மூடப் பட்டு உள்ளன.
இந்நிலையில், இந்த கொரோனா கால விடுமுறையை வீணாக்காமல் பேட்டரியில் இயங்கும் விமானத்தைத் தயாரித்து இளம் விஞ்ஞானியாக சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் அம்மன்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள அம்மன்பட்டி கிராமத் தைச் சேர்ந்த முத்துக்குமார், 17, பிளஸ் 2 படிக்கும் மாணவர்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், கூலி வேலை செய்து சம்பாதிக்கும் தனது தாய் செல்வியின் வருமானத்தில் கல்வி கற்று வருகிறார்.
முத்துக்குமாருக்கு சிறு வயது முதலே அறிவியல் கண்டுபிடிப்பு களில் அதிக ஆர்வம் இருந்து வந்தது. ஒருபக்கம் வறுமை வாட்டினாலும் மறுபக்கம் எதிலாவது சாதிக்கவேண்டும் என்ற வேட்கை அவரைத் தூங்கவிடாமல் துரத்தியது.
இந்நிலையில், இப்போது அவர், பேட்டரியில் இயங்கும் விமானத்தை தயாரித்து, அதனை இயக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு கிராம மக்கள் உள்ளிட்டோர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து முத்துக்குமார் கூறுகையில், ''தினமும் இணைய வகுப்புகள் முடிந்ததும் வீட்டில் உள்ள ஆடுகளை மேய்த்துவிட்டு, எஞ்சிய நேரத்தில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக வீட்டில் உள்ள பழைய பொருட்களைக் கொண்டு 6 அடி நீளம், 6 அடி அகலம் கொண்ட சிறிய விமானத்தை வடிவமைத்தேன். இந்த விமானத்தை இயக்கக் கூடிய ஒரு சில பாகங்களை இணையம் வழி 'ஆர்டர்' செய்துள்ளேன். விரைவில் அவை வந்தவுடன் விமானத்தை இயக்குவேன்,'' என்றார்.

