புதுடெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துகளை எடுத்துரைக்க நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிக் குழு வினர் நேற்று தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
திமுக, அதிமுக, பாமக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று மதியம் 1.30 மணியளவில் சந்தித்துப் பேச உள்ளனர்.
அப்போது, காவிரியின் குறுக்கே மேகதாது என்னுமிடத்தில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என கஜேந்திர சிங்கிடம் வலியுறுத்த உள்ளனர்.
அண்மையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அணை பிரச்சினை குறித்து விளக்கியதுடன், தமிழக விவசாயிகளின் நலனைக் காக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
அத்துடன், இவ்விவகாரம் குறித்து அனைத்து அரசியல் கட்சியினருடனும் மாநில அரசு கடந்த 12ஆம் தேதி ஆலோசனை நடத்தியது.
அப்போது, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என வலி யுறுத்துவது உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக மக்களின் எதிர்ப்பை பிரதிபலிக்கும் விதமாக இந்த தீர்மானங்களை மத்திய அமைச்சரிடம் அனைத்து கட்சிப் பிரதிநிதிகளும் நேரில் வழங்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று கஜேந்திர சிங்கை நேரில் சந்தித்து அணை விவகாரம் குறித்து பேச உள்ளனர்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஒருவேளை மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் புதுச்சேரிக்கு காவிரி நீர் கிடைக்காமல் அல்லல் படும் சூழல் ஏற்படும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, கர்நாடகாவின் முயற்சிக்கு மத்திய அரசு ஒருக்காலும் அனுமதிக்கக் கூடாது என புதுவை அரசு வலியுறுத்தியுள்ளது.
விவசாயிகள் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு அணை கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோருக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த அணை கட்டும் விவகாரத்தில் எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையிலான தீர்வை எடுக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
எனவே காவிரியோடு தொடர்புடைய தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய நான்கு மாநில முதல்வர்களுடனும் விரிவாக ஆலோசனை நடத்தி தீர்வு காண அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நான்கு மாநில முதல்வர்களுக்கும் விரைவில் கடிதம் அனுப்பப்பட உள்ளதாகத் தெரிகிறது.

