திருச்சி: தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், தமிழக பாஜகவின் துணைத் தலைவராக இருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று அவர் தமிழக பாஜக தலைவராகப் பதவியேற்க உள்ளார்.
கரூரில் இருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக வரும் அண்ணாமலை, திருச்சிக்கு நேற்று காலை வந்தடைந்தார்.
அவருக்கு மேல சிந்தாமணி பகுதியில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிப்பதற்காகக் காத்திருந்தனர்.
அப்போது, பாஜகவினர் அவருடைய வருகைக்காக பட்டாசு வெடிக்க தயாராகிக் கொண்டிருந்த நிலையில், போலிசார் வெடி வைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, நீண்ட நேரம் பாஜகவினர் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சினை நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் அண்ணாமலையின் வாகனம் அங்கு வந்து நின்றது. அப்போது பாஜகவினர் வெடிகளை வெடிக்கச் செய்தனர். காவல்துறையினரும் ஒதுங்கி நின்றனர்.

