புதுடெல்லி: மேகதாதுவில் புதிய அணையைக் கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி தரப்போவதில்லை என்று மத்திய அரசு தம்மிடம் உறுதி கூறி இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று புதுடெல்லியில் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக அதிபர் ராம்நாத் கோவிந்தை புதுடெல்லியில் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டினால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதை தொடர்ந்து தாங்கள் வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவிற்குத் தலைமை ஏற்க தான் விடுத்த அழைப்பை அதிபர் ஏற்றுக்கொண்டு இருப்பதாகக் கூறிய முதல்வர், அந்த விழாவுக்கான தேதி ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்றார்.
மதுரையில் கருணாநிதி பெயரில் கட்டப்படும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்ட அதிபர் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் சட்டமன்ற விழாவையொட்டி பேரவையில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை இப்போதைக்கு திறக்க இயலாது என்று குறிப்பிட்ட அவர், உரிய நேரத்தில் இதன் தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.