சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்துவருகிறது. ஞாயிற்றுக்கிழமை 143,429 பேருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டதில் 2,079 பேருக்குத் தொற்று இருந்தது தெரிந்தது. 29 பேர் மாண்டனர். 21 மாவட்டங்களில் உயிர் இழப்பு இல்லை என்றும் அரசு அறிக்கை தெரிவித்தது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 27,897 ஆக உள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் அடுத்த கட்டமாக ஆன்மீக தலங்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சின்னமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தடுப்பூசி சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், திருவண்ணாமலை, ராமேஸ்வரம், நாகூர், வேளாங்கண்ணி மற்றும் சின்னமலை ஆகிய பகுதிகளில் ஜூலை மாத இறுதிக்குள் தடுப்பூசி போட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார்.

