ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் என்ற பேரூரில் பாதி இடிக்கப்பட்டு நின்றிருந்த ஒரு சுவர் தானாக இடிந்து விழுந்ததில் மூவர் பலியானார்கள்.
அந்தியூரில் ஒரு தனியார் மின்சாதன விற்பனைக் கடையை இடித்து புதிதாக கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. கடை பாதி அளவில் இடிக்கப்பட்டு இருந்தது.
அந்தியூர் வார சந்தைக்குப் பொருட்களை விற்க வந்த பர்கூர் மலைப் பகுதியைச் சேர்ந்த ஏழு விவசாயிகள் சுவரின் அருகே படுத்து தூங்கினர். நள்ளிரவில் திடீரென மீதி கட்டடம் தானாக இடிந்து விவசாயிகள் மீது விழுந்தது. இதில் 7 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
அவர்களில் மூவர் அதே இடத்தில் மாண்டனர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஒரே ஒருவர் காயம் இன்றி தப்பியதாக அதிகாரிகள் கூறினர். போலிஸ் விசாரணை நடந்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. தகவல் தெரிந்ததும் எம்எல்ஏ உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர்.