சென்னை: தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை அன்புமணி ராமதாஸ் ஏற்க அதிக வாய்ப்பு உள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அன்புமணி ராமதாஸ் இப்போது பாமக இளையரணித் தலைவராக இருக்கிறார். அண்மைய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் இருந்த பாமக, 4% வாக்குகளுடன் நான்கு இடங்களில் வென்றது. கட்சியின் தலைவரான ஜி.கே.மணி, சட்டசபை பாமக தலைவராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டதால் அவர் இப்போது இரண்டு பொறுப்புகளில் இருந்து வருகிறார்.
மாநில நிர்வாகத்தில் இளைஞர்
கள் இல்லாததால், மேலிடத்திடம் தொடர்பு இல்லாமல் இடைவெளியும் தொய்வும் ஏற்பட்டுள்ளதாக கட்சித் தொண்டர்கள் கருதுவதாக ஓர் ஊடகம் தெரிவித்துள்ளது.
மூத்த நிர்வாகிகளும் இளைய நிர்வாகிகளும் இணைந்து பணியாற்றும் வகையில், நிர்வாகிகள் மாற்றம் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியில் எழுந்துள்ளது. அண்மையில் கட்சியின் 33வது ஆண்டு விழாவை ஒட்டி அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
"ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது பாமகவை உருவாக்கிய மருத்துவர் ராமதாசின் கனவாகும். அதை நனவாக்க, நான் உங்களை வழி நடத்துவேன்," என்று அறிக்கையில் அன்புமணி தெரிவித்து இருந்தார்.
இதை வைத்துப் பார்க்கையில் அன்புமணி விரைவில் கட்சித் தலைவராக தேர்ந்து எடுக்கப்படுவார் என்று கட்சியினர் கருதுவதாகவும் பாமக பொதுக்குழு கூடும்போது, கட்சியில் அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்றும் கட்சித் தரப்பினர் தெரிவிப்பதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

