புதுவை: மாப்பிள்ளையை மகிழ்ச்சிபடுத்தும் விதமாக மாமனார் செய்த சீர்வரிசை (படம்) புதுவை மக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
ராஜமுந்திரியை சேர்ந்தவர் பலராமகிருஷ்ணா. இவரது மகள் பிரத்யுஷாவுக்கும் ஏனாம் பகுதியைச் சேர்ந்த பவன்குமார் என்பவருக்கும் கடந்த மாதம் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து புகுந்த வீடு சென்ற பிரத்யுஷாவை கணவன் வீட்டார் நன்றாகக் கவனித்துக் கொள்வதாக பலராமகிருஷ்ணாவுக்குத் தெரியவந்தது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர், புதுமணத் தம்பதியர்க்கு ஆடி சீர் வரிசை அனுப்பி வைத்துள்ளார். சீர்வரிசையில் இடம்பெற்றுள்ளவைதான் மக்களை வியக்க வைத்துள்ளது.
ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடுகள், 50 கோழிகள், ஆயிரம் கிலோ காய்கறி, 250 கிலோ மளிகைப் பொருட்கள், 250 கிலோ ஊறுகாய், 50 வகை இனிப்புகள் ஆகியவைதான் அந்தப் பொருள்கள்.
ஏராளமான வண்டிகளில் அவற்றை ஏற்றி மகளின் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் பலராமகிருஷ்ணா.
சாலையில் சென்றபோது அந்த வண்டிகளின் அணிவகுப்பை ராஜமுந்திரி, ஏனாம் பகுதி மக்கள் பார்த்து வியந்தனர்.

