மதுரை: திமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட பாஜக தயங்காது என அக்கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்களின் தவறுகள் குறித்து தயக்கமின்றிப் பேசினால்தான் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள அரசியல் சூழலில் திமுகவுக்கு பாஜகதான் எதிரி என்றும் இந்த அடிப்படையில் தான் தமிழக அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும் அண்ணாமலை கூறினாரா்.
"ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல திமுகவில் தற்போது மூன்று முதல்வர்கள் உள்ளனர். இதுதான் திமுகவின் சித்தாந்தம்.
"பாஜக நிர்வாகிகள், தொண்டர்களைச் சந்தித்து வருகிறேன். ஊரடங்கு தளர்வால் உள்ளரங்கு கூட்டங்களை நடத்த உள்ளோம்," என்றார் அண்ணாமலை.
பாஜக சிந்தாந்த அடிப்படையில் செயல்படக்கூடிய கட்சி என்று குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடி அறிவித்த நலத் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் மூன்றரை கோடி மக்கள் பலன் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். இதனால் அடுத்து வரும் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது என்றார் அண்ணாமலை.
"பாஜக எப்போதுமே தனி மனித கருத்துரிமைக்கு மதிப்பளிக்கும். யாருடைய பேச்சையும் ஒட்டுக்கேட்க வேண்டிய அவசியம் எழவில்லை. எனவே அடிப்படையில் குற்றம் சாட்டுவதை ஏற்க இயலாது.
"பலரது கைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாக அரசியல் காரணங்களை முன்னிறுத்தி, ஒரு குறிப்பிட்ட ஊடகம் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது," என்று அண்ணாமலை மேலும் தெரிவித்தார்.

