மா.சுப்பிரமணியன்: தடுப்பூசிகளை வீணடிக்காமல் 300,000 பேருக்கு கூடுதலாக போடப்பட்டுள்ளது
சென்னை: ஜூலை மாதம் மாநிலங்களுக்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்துக்கு கூடுதலாக 500,000 தடுப்பூசிகளை வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அனுப்பும் தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் உடனடியாக பிரித்து அனுப்புவதிலும் அவற்றை முழுவதுமாக பயன்படுத்துவதிலும் நாட்டிலேயே தமிழகம் தான் முதல் மாநிலமாகத் திகழ்கிறது என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்துக்குத் தேவைப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், இதுவரை 18,032,170 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாகக் கூறினார்.
"மத்திய அரசிடம் இருந்து பெற்றதில் இதுவரை 18,003,777 தடுப்பூசிகள் பயனாளிகளுக்குப் போடப்பட்ட நிலையில், 342,820 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
"நாள்தோறும் மாநில அரசிடம் எவ்வளவு தடுப்பூசிகள் மீதமுள்ளன என்பது குறித்த விவரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை மின்னஞ்சல் மூலம் மத்திய அரசிடம் தெரிவிக்கும்," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட தடுப்பூசிகளில் எந்தெந்த மாநிலங்கள் அவற்றை விரைவாகப் பயன்படுத்துகின்றன என்பதை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் பணியை தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய தடுப்பூசிகள் எந்தவித தாமதத்துக்கும் இடம்கொடுக்காத வகையில் அனைத்து மாவட்டங்களுக்கும் உரிய வகையில் உடனடியாக பிரித்து அனுப்பப்படுவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
"கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 400,340 தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டன. ஆனால் நடப்பு ஆட்சியில், அதையும் சமன் செய்கிற அளவில் சுமார் 300,000 தடுப்பூசிகள் கூடுதலாக போடப்பட்டுள்ளன.
"இந்தத் தகவலை தமிழக முதல்வர் அண்மையில் பிரதமர் முன்னிலையிலேயே தெரிவித்திருக்கிறார்," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழகத்தைப் பொறுத்தவரை 12 கோடி தடுப்பூசி தேவை என்று குறிப்பிட்ட அவர், இதுவரை 1.80 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.
தினமும் 7 லட்சம் வீதம் மாதம் 2 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் கட்டமைப்பு வசதிகள் தமிழகத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
"ஆனால் தினமும் நான்கு முதல் ஐந்து லட்சம் தடுப்பூசிகள்தான் தமிழகத்துக்கு கிடைக்கிறது. மத்திய அரசு பத்து கோடி தடுப்பூசிகளை விரைவாக தரும் பட்சத்தில் அடுத்த நான்கைந்து மாதங்களுக்குள் தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிடும்," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

