முதல்வர் ஸ்டாலின்: முதலீட்டாளர்களுக்கு உகந்த வணிக சூழலை உருவாக்குவோம்
சென்னை: தெற்காசியாவில் தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்துவதே திமுக அரசின் லட்சியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக தமிழகத்தை உருவாக்குவதே தமது தலைமையிலான அரசின் குறிக்கோள் என்றும் அவர் கூறினார்.
சென்னையில் நேற்று முன் தினம் தமிழக அரசின் தொழில்துறை சார்பாக 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' என்ற கருப்பொருளில் அரசு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், அரசின் புதிய இலக்கை நோக்கிப் பயணிக்க முதலீட்டாளர்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
"எங்கள் நோக்கம் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக மாற்றுவதாகும். இதற்கான உகந்த வணிக சூழலை முதலீட்டாளர்களுக்கு வழங்குவோம்.
"இரண்டு மாதங்களுக்கு முன்பு திமுக பதவிக்கு வந்தபோது மாநிலத்தின் நிதி நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் இப்போது பொருளாதாரம் மெல்ல மீண்டு வருகிறது," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதலீட்டாளர்களுக்கும் புதிய நிறுவனங்களுக்கும் தமிழக அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கும் என்று குறிப்பிட்ட அவர், புதிய தொழில் திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றார்.
இதையடுத்து பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்திற்கு வரும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் வழிகாட்டி உதவ முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழகத்திற்கு 23 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 46 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என தொழில்துறை செயலாளர் முருகானந்தன் தெரிவித்தார்.

