சென்னை: நாட்டில் முக்கிய பிரமுகர்களின் கைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை சரமாரியாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் சார்பாக இன்று போராட்டம் நடத்தப்படும் என அதன் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அவரது அலுவலக ஊழியர்களின் கைபேசிகளும் ஒட்டு கேட்கப்பட்டதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள அவர், 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது பெகாஸஸ் செயலி பயன்படுத்தப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறியுள்ளார்.
"எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்களின் கைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டது தெளிவாகத் தெரிகிறது.
"இந்தப் பிரச்சினை தொடர்பாக, உச்ச நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் நீதி விசாரணை நடத்தக் கோரியும் அமித் ஷா விலகக் கோரியும் போராட்டம் நடைபெறும்," என கே.எஸ். அழகிரி மேலும் தெரிவித்துள்ளார்.

