கரூர்: முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வீடு, அலுவலகம், நிறுவனங்களில் 50க்கும் மேலான லஞ்ச ஒழிப்புத் துறை போலிசார் நேற்று திடீரென்று அதிரடிச் சோதனை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர்.
சென்னையில் ஓரிடத்திலும் கரூர் மாவட்டத்தில் 20 இடங்களிலும் இச்சோதனை தொடர்ந்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக விஜயபாஸ்கர் இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பு ஏற்படும் வகையில் முறை கேடாக ஊழலில் ஈடுபட்டதாகவும் இவர் மீது புகார் கூறப்பட்டது.
வாகனங்களுக்கான வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை ஏலக் குத்தகைக்கு விடுவதில் முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இச்சோதனை கள் நடத்தப்படுவதாக தகவல்கள் பரவிய நிலையில், விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர்.
அதேபோல் அவரது இல்லம் முன்பு போலிசாரும் பாதுகாப்புப் பணிக்காக நின்றிருந்தனர்.
கரூர் செல்வநகரிலுள்ள விஜயபாஸ்கரின் வீடு, அவரது தாய் வீடு, அவரது சாயப்பட்டறை, அட்டை தயாரிப்பு நிறுவனம் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.
விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரின் வீடு, சேகரின் சம்பந்தி வீட்டி லும் இந்தச் சோதனை நடப்பதாக தகவல்கள் வெளியாகின.
பரமத்தியில் உள்ள கல்குவாரி, மில்கேட்டில் உள்ள தறி பட்டறையிலும் சோதனை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்புத் துறை போலிசார், விஜயபாஸ்கரின் உதவியாளர்களான சுப்பிரமணி, ரமேஷ், கார்த்தி ஆகியோரது வீடுகளிலும் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் ஏகாம்பரம் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் கைப்பற்றப் பட்ட பொருள்கள், ஆவணங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் விஜயபாஸ்கர் தோல்வியடைந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு சில முக்கிய அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று செய்திகள் வெளிவந்த நிலையில், இப்போது விஜயபாஸ்கரின் வீடு சோதனைக்கு ஆளாகி உள்ளது.
இதனிடையே, அரசியல் காழ்ப் புணர்ச்சியோடு எம்.ஆர். விஜய பாஸ்கர் இல்லத்தில் சோதனை நடத்தப்படுவதாக அதிமுக ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

