மும்பை: தென்மேற்குப் பருவமழையால் மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு ராய்காட் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 38 பேர் உயிரிழந்ததாகவும், மழை, வெள்ளத்தில் சிக்கி 33 பேர் பலியானதாகவும் 30க்கு மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
கொங்கன் மண்டலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக இடைவிடாது பெய்த கனமழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல்துறை, விமானப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏறக்குறைய 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் மகாராஷ்டிராவில் இப்போது மழை பெய்து வருகிறது.
இதில் ராய்காட் மாவட்டம், மகாத் பகுதியில் பெய்த கனமழையால் தெலி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தில் உள்ள ஏராளமான வீடுகளும், அதில் குடியிருந்தவர்களும் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அந்தக் கிராமத்தில் மீட்புப் பணிமுடுக்கிவிடப்பட்டுள்ளது. மண்ணில் புதையுண்டவர்களில் இதுவரை 36 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரத்னகிரி மாவட்டத்தில் வஷிஸ்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
மும்பையில் இருந்து 250 கி.மீ தொலைவில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கடலோர நகரமான சிப்லுன் முற்றிலும் மூழ்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொங்கன் பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசின் நிவாரண முகாம்களுக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு முதல்வர் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டார்.