ஹைதராபாத்: தெலுங்கானா முழுவதும் இடைவிடாமல் பெய்துவரும் கனமழையால் வடக்கு மாவட்டங்களான நிர்மல், ஆதிலாபாத், கொமுரம் பீம், ஆசிபாபாத் மற்றும் நிஜாமாபாத் ஆகிய பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. நீர்நிலைகள் நிரம்பி குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
தாழ்வான பகுதியில் உள்ள நிர்மல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகள் தண்ணீரில் மூழ்கின. பலரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
நிர்மல் நகரத்தின் அருகேயுள்ள ஆறுகள், நீர்நிலைகள் ஆகியவை நிரம்பி வழிவதால் சாலைகளும் வீடுகளும் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
நிர்மல் நகரின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மேலும் பலர் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களைக் கண்டுபிடித்து மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தாழ்வான மற்றும் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிக்கரையோரம் உள்ள தாழ்வு நிலங்களில் வெள்ளம் வரலாம் என்று அம்மாநில அரசு, மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெலுங்கானா மாநில மேம்பாட்டுத் திட்டக் கழகத்தின் தரவுகளின் அடிப்படையில் நேற்று முன்தினம் வரை சாரங்கபூரில் 15 செ.மீட்டரும் தெலுங்கானாவின் வடக்கு கிழக்கு வட்டாரங்களில் 20 செ.மீ. முதல் 25 செ.மீட்டர் வரை மழை பெய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அம்மாவட்ட நிர்வாக அதிகாரிகள், நிர்மல் மாவட்டத்தில் சினாபூர் கிராமத்தைத் தவிர மற்ற பகுதிகளில் வெள்ளம் கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் ஏராளமானோர் மீட்கப்பட்ட நிலையில், சுமார் 70 பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

