ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு பகுதியில் உள்ள சம்பா அனைத்துலக எல்லைப் பகுதியில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த வெடிபொருட்களுடன் வந்த ஆள் இல்லா விமானத்தை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.
அந்த விமானத்தில் இருந்த சக்திவாய்ந்த வெடிபொருட்களை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
சம்பாவின் கனாசக் பகுதியில் உள்ள அனைத்துலக எல்லைப் பகுதியில் ஆள் இல்லா விமானம் சுற்றிவருவதாகக் காவல்துறை தந்த தகவலின் அடிப்படையில் அங்கு அதிவிரைவுப்படை அனுப்பி வைக்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து அதிவிரைவுப்படை அங்கு சென்று அந்த ஆள் இல்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தினர்.
அந்த விமானம் ஐந்து கிலோ எடை கொண்ட சக்திவாய்ந்த ஐஇடி வெடிபொருட்களைச் சுமந்து 8 கி.மீ. தொலைவு அனைத்துலக எல்லைக்குள் பறந்துவந்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த விமானத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது; எங்கு கொண்டு செல்லப்படவிருந்தது போன்ற விவரங்களை அறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது லஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாதிகளின் சதிச்செயலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் 27ஆம் தேதி இதேபோன்று இரு ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீசப்பட்ட வெடிபொருட்களால் ஜம்முவில் விமானப்படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

