மழைபெய்தும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறையும் நிலை
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் குடகு மாவட்டத்திலும், கேரள மாநிலத்தின் வயநாட்டிலும் கடந்த வாரத்தில் கனமழை பெய்ததால் காவிரி மற்றும் கபிலா ஆகிய இரு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கபிலா ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 2283.80 அடியாக உயர்ந்தது.
கிருஷ்ண ராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகத்துக்கு 17,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அதன் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில்
நீர்வரத்து அதிகரிப்பு
குற்றாலம்: தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மற்றும் அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலை குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதேபோல் புலியருவி, பழைய குற்றாலத்திலும் அதிகளவு தண்ணீர் வருகிறது. தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 108.95 அடியாக இருந்தது.
பாம்பை விரட்ட பூனைக்காவல்
புவனேஸ்வர்: நல்ல பாம்புகள் நடமாட்டம் அதிகமுள்ளதால் வீட்டுக்கு வெளியே காவலுக்கு தனது செல்லப்பூனையை நிறுத்தி வைத்துள்ளார் வீட்டின் உரிமையாளர். அவரும் அவருடைய குடும்பத்தினரும் இரவில் உறங்கும்போதும் வெளியே செல்லும்போதும் இந்த ஒன்றரை வயது பூனைதான் வீட்டைக் காவல் காக்கும். அடிக்கடி வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்த ஒன்றரையடி நீளமுள்ள ஒரு நல்ல பாம்பை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்து, அந்தப் பாம்பை எங்கும் நகரவிடாமல் காவலுக்கு நின்றது அந்தப் பூனை. இந்தச சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் என்ற ஊரில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாம்பென்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு குட்டிப் பூனை துணிச்சலுடன் ஒரு நச்சுப்பாம்பை எங்கும் நகரவிடாமல் வாசலிலேயே தடுத்து சிறைப்பிடித்து வைத்திருந்த காட்சியைக் காணொளியில் பார்த்து பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் வரை பாம்பை, பூனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், பாம்பைப் பிடித்து காட்டுக்குள் விட்டுள்ளனர். "இந்தப் பூனையை நாங்கள் ஒரு விலங்காகப் பார்க்கவில்லை. இவனும் எங்கள் குடும்ப உறுப்பினர்தான் என்று," என்று பெருமையுடன் கூறுகிறார் அதன் உரிமையாளர் சம்பத் பரிடா.
வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி பெற டெல்லி செல்லும் அமைச்சர்கள்
புதுச்சேரி: புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் மற்றும் நிதி பெறுவதற்காகவும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அடுத்த வாரம் புதுடெல்லி செல்லவிருப்பதாக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி சுமுகமாக இருந்து புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த பாடுபடுவோம்.
ஊரக வளர்ச்சியின் மூலமாக அனைத்து மக்களையும் பொருளியல் ரீதியாக மேம்படுத்துவதற்கான பல திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

