மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) 'சிறுபான்மையினரின் உரிமை மீட்பு' கூட்டத்தில் ஜனநாயக கிறிஸ்தவப் பேரவையைச் சேர்ந்த ஜார்ஜ் பொன்னையா என்ற பாதிரியார் பேசினார்.
அப்போது அவர் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் குறித்து வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசியதாக புகார்கள் அளிக்கப்பட்டன.
சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது குறித்தும் சமய அடிப்படையில் சர்ச்சைக்குரிய சில கருத்துகளை அவர் வெளியிட் டிருந்தார்.
அவருடைய இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியானதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. புகார்களின் பேரில் அருமனை போலிசார் வழக்குப் பதிவு செய்து ஜார்ஜ் பொன்னையாவைத் தேடினர்.
அதனைக் கேள்விப்பட்டதும் அவர் தலைமறைவானார். அவரைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் நேற்று ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.