சென்னை: தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவையொட்டி மேல்சபையை மீண்டும் கொண்டு வருவதற்குரிய முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தமிழக ஊடகமான தினமலர் தகவல் வெளியிட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை இது குறித்து முடிவு எடுத்து வரவு செலவுக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா அடுத்த மாதம் 2ஆம் தேதி அதிபர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சென்னையில் கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக டெல்லியில் அவரைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து அதிபர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகிறார். அதையொட்டி சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் திறப்பு, மதுரையில் கருணாநிதி நுாலகத்திற்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வரவு செலவுத் திட்ட கூட்டத் தொடரும் தொடங்கு கிறது.அந்த சமயத்தில் மேல்சபை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றினால் பொருத்தமாக இருக்கும் என அரசு தரப்பில் கருதப் படுகிறது.அதற்கு முன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடி அதில் மேல்சபையை மீண்டும் கொண்டு வருவதற்கு ஒப்புதல் பெறப்படும் என்று தினமலர்
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றவும் அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் சட்ட மேல்சபை உருவாக்கப்படும் என அறிவித்திருந்தது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரிகள் கூறினர்.
1989ல் திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மேல்சபைக்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. விடுதலைப் புலிகள் விவகாரம் தொடர்பாக திமுக ஆட்சி கலைக்கப்பட்டதால் அத்தீர்மானம் நிறைவேறவில்லை. 2006ல் திமுக ஆட்சியில் சட்டசபையில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்தியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அரசு இருந்ததால், லோக்சபா, ராஜ்யசபா என இரண்டு சபைகளிலும் அந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் கிடைத்தது. அதிபர் ஒப்புதலுக்குப் பிறகு மேல்சபை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
ஆனால், 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததால் மேல்சபை தீர்மானத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்தார்.
தற்போது கருணாநிதி கனவை முதல்வர் ஸ்டாலின் நனவாக்கும் வகையில் வரவு செலவுக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அடுத்த குளிர்கால கூட்டத் தொடரில் இரு சபைகளிலும் தீர்மானம் நிறைவேறி அதிபர் ஒப்புதல் கிடைத்ததும் அடுத்த ஆண்டு மேல்சபை அமைய வாய்ப்புள்ளது.