சென்னை: தமிழகத்தில் சுற்றுலா தலங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்வதற்கான முன் பதிவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தொடங்கியுள்ளது. சுற்றுலாத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கிருமித்தொற்று அதிகரித்த தன் காரணமாக சுற்றுலா பயணி களை சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்வதை கழகம் நிறுத்தி வைத்திருந்தது.
தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாலும் ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்து உள்ளதாலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சுற்றுலா திட்டங்களை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஒரு நாள் சக்தி பயணம்; ஐந்து நாட்கள், 108 அம்மன் கோவில் பயணம்; மூன்று நாட்கள் ஆடி அமாவாசை ராமேஸ்வரம் பயணம் ஆகியவற்றுக்கு முன்பதிவு துவக்கப்பட்டுள்ளது.
இதற்கு, www.ttdconline.com என்ற இணையத்தளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் சக்தி பயணத்திற்கு நபருக்கு 850 ரூபாய்; ஐந்து நாட்கள், 108 அம்மன் கோவில் சுற்றுலாவுக்கு தனி நபருக்கு 12,500 ரூபாய், அறையை பகிர்ந்துகொள்ளும் இருவருக்கு 9,500 ரூபாய், குழந்தைக்கு 8,000 ரூபாய்; மூன்று நாட்கள் ஆடி அமாவாசை சுற்றுலாவில் தனி நபருக்கு 6,500 ரூபாய், அறையை பகிர்ந்து கொள்பவர்களுக்கு 5,500 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை தவிர இதர சுற்றுலாவுக்கும் கழகம் ஏற்பாடு செய்து வருகிறது.

