திருப்பூர்: தமிழகத்தில் உள்ள கோயில்களின் பல்வேறு பணி களுக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்ற சனிக்கிழமை அன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
"தமிழகத்தில் கோவில்கள் அனைத்தையும் தூய்மை நிறைந்த இடமாக மாற்றவும் நந்தவனம், திருத்தேர் பழுதடைந்தால் அவற்றை சரி செய்யவும், கோவில் தெப்பக்குளங்களில் தண்ணீர் விடுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்படும்.
"கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய கோவில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று அமைச்சர் கூறினார்.
"அந்தப் பணிகளை முடுக்கி விடுவதற்காக மாவட்டந்தோறும் ஆய்வு நடக்கிறது. எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு வருமானம் தரக்கூடிய கோவில்கள், வருமானம் இல்லாத கோவில்கள் என்ற நிலையை மாற்றி அனைத்து கோவில்களிலும் ஒரு கால பூஜை நடத்தப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
"அதன்படி இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் கோவில்களில் கும்பாபிஷேகம் மற்றும் பணிகள் நடைபெறும். மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி என்பது ஆன்மிக மக்களுக்கு பொற்கால ஆட்சியாக என்றும் இருக்கும் அளவுக்கு இந்து சமய அறநிலையத்துறை பணிகள் நடக்கும்," என்று அமைச்சர் சேகர்பாபு மேலும் கூறினார்.
கோவில் நிலங்கள் குறித்து தினமும் இரண்டு இடங்களிலாவது ஆக்கிரமிப்புகளை இந்து சமய அறநிலையத் துறையினர் அகற்றி வரு வதாகக் கூறிய அவர், கடந்த 75 நாட்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான இடங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.