சென்னை: தமிழகத்தின் நிதி நிலைமையைச் சரிப்படுத்த நாங்கள் தீர்க்கமாகச் சிந்தித்து வருவது உண்மைதான். எனினும், மீண்டும் லாட்டரிச் சீட்டு விற்பனையை அமலுக்கு கொண்டு வரும் திட்டம் எங்கள் சிந்தனை வட்டத்துக்குள் இல்லை என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏற்கெனவே லாட்டரி விற்பனை தடை செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் லாட்டரி விற்பனையைக் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து விளக்கம் அளித்து உள்ள நிதி அமைச்சர், "லாட்டரிச் சீட்டை மீண்டும் திமுக அரசு கொண்டுவர முயற்சி செய்ய வேண்டாம் என்று உண்மைக்குப் புறம்பான ஓர் அறிக்கையை வெளி யிட்டிருக்கும் பழனிசாமிக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக அரசு சீரழித்த நிதி நிலைமையைச் சரி செய்யும் நெருக்கடி இப்போதைய அரசுக்கு இருந்தாலும் நிதி ஆதாரத்தைப் பெருக்கும் வழிகளில் லாட்டரி பற்றிய சிந்தனையே அரசுக்கு இல்லை," எனக் கூறியுள்ளார்.