நீலகிரி: குன்னுார் வண்டிச்சோலையைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரி என்ற சமூக ஆர்வலரின் முயற்சியால் நீலகிரி மாவட்ட மக்கள் அவசர சிகிச்சை வாகன வசதியைப் பெற்று வருகின்றனர்.
ரூ.21 லட்சம் செலவில் தயாரான ஆறு ஆட்டோ அவசர சிகிச்சை வாகனங்களை கடந்த 4ஆம் தேதி நீலகிரியில் முதல்முறையாக ராதிகா அறிமுகம் செய்து வைத்தார்.
பல்வேறு தன்னார்வ அமைப்பு களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அன்பளிப்பாக வழங்குவதற்காக 470 சிசி திறன் கொண்ட பஜாஜ் மாக்சிமா வண்டிகள் அவசர சிகிச்சை வாகனங்களாக மாற்றி அமைக்கப்பட்டன. இதில் முதலுதவி சிகிச்சை அளிக்கும் வசதி, படுக்கை வசதி, உதவியாளர் இருக்கை, உயிர்வாயு உருளை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இதுகுறித்து ராதிகா கூறுகையில், "நீலகிரி கிராமங்களில் மிகவும் குறுகலான சாலைகளில் இந்த அவசர சிகிச்சை வாகனங்கள் சென்று வருவது மிகவும் பயன் தருகிறது. இந்நிலையில், பிரதமரின் பாராட்டும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்வதும் மனநிறைவு தருகிறது," என்றார்.
ஒவ்வொரு ஞாயிறு அன்றும் 'மனதின் குரல்' என்ற வாெனாலி நிகழ்ச்சி மூலம் சமூக சேவைகளைச் செய்து வருபவர்களுக்கு வாழ்த்தி, பாராட்டுகளைத் தெரிவித்து வரும் பிரதமர் மோடி, இப்போது ராதிகா சாஸ்திரியையும் பாராட்டி இருந்தார்.

