சென்னை: இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் வழக்கு தொடர்பில், நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து தனி நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு நுழைவு வரியை நீக்கக் கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், "வரி என்பது நன்கொடை அல்ல. கட்டாயப் பங்களிப்பு. சமூக நீதிக் காகப் பாடுபடுவது போல் சித்தி ரிக்கப்படும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்கமுடியாது. நடிகர்கள் உண்மையான நாயகன்களாக இருக்கவேண்டுமே தவிர ரீல் நாயகன்களாக இருக்கக்கூடாது," என விமர்சித்திருந்தார். அத்துடன், விஜய்யின் வழக்கைத் தள்ளுபடி செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு நேற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜய் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன், "தனி நீதிபதி மனுதாரரைத் தேச விரோதியாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும். ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தவேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை. அதை மதிக்கிறோம். நுழைவு வரி செலுத்தவும் தயாராக உள்ளோம்," என்று வாதிட்டார்.
இதையடுத்து நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

