சென்னை: தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையைத் தவிர்க்க பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
பொதுமக்கள் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் நேற்று முன்தினம் தொற்று விகிதம் சற்றே அதிகரித்துள்ளது என்றும் இது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிஉள்ளார்.
"சென்னை, கன்னியாகுமரி, ஈரோடு, கடலூர், கோவை மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை சற்றே உயர்ந்துள்ளது.
இதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர்க்கு அறிவுறுத்தி உள்ளோம்.
"கேரளாவில் வீடுகளில் தங்கி சிகிச்சைபெறும் முறை அதிகரித்துள்ளதால்தான், அங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுபோல் தமிழகத்தில் அதுபோன்று இல்லாமல், தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்," என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சென்னையில் மக்கள் அதிகம் கூடும் ஒன்பது இடங்களில் உள்ள கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதிவரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.

