மும்பை: தனியார் வங்கிக் கிளையில் நடந்த கொள்ளை முயற்சியைத் தடுக்க முயன்ற வங்கி உதவி மேலாளர் குத்திக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில் விரார் கிழக்கு பகுதியில் உள்ள வங்கிக் கிளையில் 35 வயதான உதவி மேலாளர் யோகிதா, 32 வயது காசாளர் ஷ்ரத்தா ஆகிய இரு பெண்களும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென உள்ளே நுழைந்த இரு ஆடவர்கள் கத்தி முனையில் இரு பெண்களையும் மிரட்டி வங்கிக்கிளையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த நகைகள், ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து தப்ப முயன்றனர்.
அப்போது இரு ஊழியர்களும் கூச்சல் எழுப்பியதைக் கேட்டு சாலையில் சென்றவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், கத்தியால் இரு பெண்களையும் குத்தியதில் யோகிதா உயிரிழந்தார்.
கொள்ளையர்களில் ஒருவனை பொதுமக்கள் பிடித்தனர். விசாரணையில், அவர் அதே வங்கியின் மற்றொரு கிளையில் மேலாளராகப் பணியாற்றுவதும் பணப்பிரச்சினை காரணமாக கொள்ளையடிக்க முயன்றதும் தெரிய வந்துள்ளது.
தப்பி ஓடிய அவரது கூட்டாளிக்கு வலைவீசப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

