சென்னை: ஆடி அமாவாசை நாளான நேற்று அரசாங்கக் கட்டுப் பாட்டில் உள்ள கோயில், குளங்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக வேதாரண்யம் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
வழிபாட்டுத் தலங்களில் மக்கள் அதிகம் குவிவதால் கிருமித் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் விழாக்கால நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சுவாமி தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த வாரத்திலிருந்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டுக்குத் தடை விதித்து அண்மையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதே சமயத்தில் நேற்று ஆடி அமாவாசை நாளில் தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் அளிப்பதற்காக கோயில் குளங்களில் பக்தர்கள் குவிந்து தர்ப்பணம் முடித்து, கோவில்களில் வழிபாடு நடத்துவர்.
இதனால் நேற்று கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர்பாபு, "அண்மைய காலமாக கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் களிலும் திங்கள் முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடி அமாவாசை, 11ஆம் தேதி ஆடிப் பூரம் ஆகிய இரு நாட்களிலும் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனை தவிர்க்க, குறிப்பிட்ட இரண்டு நாட்களிலும் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. அதேநேரம், ஆகம விதிகளின்படி கோயில்களில் பூஜைகள் நடைபெறும்," என்றார்.
இந்த நிலையில் நேற்று வேதாரண்யம் கடற்கரைக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக வந்த பக்தர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேதாரண்யம், கோடியக்கரை மற்றும் வேதாரண்யம் கடலில் இறந்த முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி, பின்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமியை வழிபடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் ஆடி அமாவாசைக்கு கடலில் குளிப்பதற்குத் தடை விதித்துள்ளது.
இதனால் பக்தர்கள் நேற்று ஏமாற்றத்துடன் குளிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.
இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி படித்துறை களிலும் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப் பட்டனர். தஞ்சை புதுஆறு படித் துறைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. பலர் தங்களது வீட்டின் மாடியிலேயே முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இந்நிலையில், தர்ப்பணம் கொடுப்பதற்காக வைகை ஆற்றில் தடையை மீறி குவிந்த மக்களை போலிசார் எச்சரித்து வெளியேற்றி னர்.

