திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடியில் உள்ள ஒரு வங்கியில் துப்பாக்கிக் கொள்ளையர்கள் ஏழு பேருக்கு, மன்னார்குடி அமர்வு நீதிமன்றம் நேற்று நீண்ட சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அவர்களில் ஐந்து பேருக்குத் தலா 10 ஆண்டுகளும் ஒருவருக்கு 9 ஆண்டுகளும் மற்றொருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது. சென்ற 2018ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பிற்பகல் நேரத்தில், மன்னார்குடி அருகேயுள்ள அசேசம் என்ற ஊரில் தமிழ்நாடு மொர்க்கன்டைல் வங்கியில் புகுந்த ஏழு துப்பாக்கிக் கொள்ளையர்கள், அவ்வங்கியின் மேலாளரை மிரட்டி வங்கியில் இருந்த ரூ.5,58,550 ரொக்கம், ரூ.2.51 லட்சம் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக அவ்வங்கி மேலாளர் கோவிந்தராஜன் போலிசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்ட போலிசார் கொள்ளையர்கள் ஏழுபேரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
அதில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த மரியசெல்வம்(35), மீரான் மைதீன்(31), சுடலைமணி(31), மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அயூப்கான்(29), ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த ராஜா(35) ஆகிய 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார்(31) என்பவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை, சுடலைமணி என்ற மணிகண்டன்(25) என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். தண்டனை பெற்ற கொள்ளையர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

