இந்தியாவில் முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி வரவு செலவுத் திட்டம்
சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்று இம்மாதம் 14ஆம் தேதியுடன் (நாளை) 100 நாட்கள் ஆகிறது.
அதற்குள் திமுக 120 மக்கள் நலத் திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்நிலையில் திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து முதல் முறையாக இன்று 2021-2022ஆம் ஆண்டுக்கான பொது வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இது மட்டுமல்லாமல் நாளை சனிக்கிழமை அன்று இந்தியாவிலேயே முதல் முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது.
இதனல் இரு வரவு செலவுத் திட்டங்களில் அடுக்கடுக்கான அறிவிப்புகள் இடம்பெறும் என்று தமிழக மக்களும் விவசாயிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் தொடங்கும்.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறார். நாளை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
இன்று வரவு ெசலவு திட்ட உரையுடன் தொடங்கும் சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 21ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
காகிதமில்லா மின்-பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
அதன்படி எம்.எல்.ஏ.க்கள் இருக்கை முன்பு கணினி வைக்கப் பட்டுள்ளது.
அவர்களுக்கு கையடக்கக் கணினியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் இதில் என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறும், வரிவிதிப்பு இருக்குமா? சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையே இந்த சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்ப திட்டமிட்டுள்ளன.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் இன்னும் என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை பட்டியலிட்டு பேச எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.

