தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரியணை ஏறிய திமுக அரசாங்கம் இன்று (ஆகஸ்ட் 13) மாநிலத்தில் முதலாவது காகிதமில்லாத வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தது.
மாநிலத்தின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ‘தமிழகத்தை மீட்டெடுப்போம்’ என்ற புதிய வரவுசெலவுத் திட்டத்தை ‘திருத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டம்’ என்று வர்ணித்து தாக்கல் செய்தார்.
பெட்ரோல் விலை ரூ. 3 குறைக்கப்படும்; வேலை பார்க்கும் கர்ப்பிணி பெண்களுக்கு மேலும் பிரசவ விடுப்பு அளிக்கப்படும்; திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டுள்ள புதிய வரவுசெலவுத் திட்டம், மாநிலத்தின் வளர்ச்சிக்கு நம்பிக்கை ஊட்டும் என்றாரவர்.
தமிழ்மொழி, பசுமை, கல்வி, அகழாய்வு, மேம்பாட்டுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.