சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரவு செலவுத் திட்ட உரையை அமளிக்கு மத்தியில் வாசிக்கத் தொடங்கியதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேர்தலின்போது நடைமுறைப் படுத்த முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை திமுக ஏமாற்றி விட்டதாகத் தெரிவித்தார்.
"தேர்தலின்போது 500க்கும் மேற்பட்ட நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் போடப்போகும் முதல் கையெழுத்தே 'நீட்' தேர்வு ரத்து என்பது தான் எனக்கூறிவிட்டு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகும் நிலையில் 'நீட்' தேர்வை ரத்து செய்ய முடியாமல் மாணவர்களிடையே குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
"வெள்ளை அறிக்கையின் போது உண்மைக்குப் புறம்பான தகவலை நிதியமைச்சர் வெளியிட்டு இருக்கிறார். வாக்குறுதி அளித்துவிட்டு 'நீட்' தேர்வை ரத்து செய்யாத திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவினர் பொய் வழக்குகளைப் போடுவதை வன்மையாக கண்டிக்கிறோம், பொய் வழக்குகளை கண்டு அதிமுக அஞ்சாது," என்று எடப்பாடி பழனிசாமி மேலும் கூறினார்.

