சென்னை: இன்று சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சுமார் 100,000 போலிசார் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். கோட்டையைச் சுற்றி ஐந்து அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் கடல் வழி தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் சுற்றுக்காவல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மாநிலத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், விமான, ரயில், பேருந்து நிலையங்களில் போலிசார் வழக்கத்தைவிட தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகரம் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம் கண்காணிப்புப் பணி நடைபெற்றது.
13 கடலோர மாவட்டங்களிலும் கடலோரக் காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும வீரர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

