சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நடிகர் வாகை சந்திரசேகர் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவர் பொறுப்பையும் அவரே வகிப்பார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
"வாகை சந்திரசேகர், தமிழ்த் திரைப்படத் துறையில் தனது குணச்சித்திர நடிப்பால் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருந்த காரணத்தால், இவரது நடிப்பாற்றலைப் பாராட்டி, 1991ஆம் ஆண்டு, 'கலைமாமணி விருது'' வழங்கிச் சிறப்பித்தார் அன்றையை முதல்வர் கருணாநிதி.
"மேலும், 2003ஆம் ஆண்டு மத்திய அரசால் வழங்கப்படும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது' உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர் வாகை சந்திரசேகர்," என்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலராகப் பதவி வகித்துள்ளார் வாகை சந்திரசேகர்.
மேலும், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் 2016 முதல் 2021 வரை பொறுப்பு வகித்துள்ளார்.

