'கோடநாடு கொலை வழக்கில் என்னைச் சிக்க வைக்க சதி'
சென்னை: காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு வீட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில் தம்மைச் சிக்க வைக்க திமுக அரசு சதி செய்வதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அக்குறிப்பிட்ட வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ள நிலையில், அதிமுக தலைவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து திமுக அரசு அச்சுறுத்தப் பார்ப்பதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்த வழக்கில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கோடநாட்டில் உள்ள அவரது வீட்டுக்குள் சிலர் புகுந்து கொள்ளையடித்தனர். அப்போது அங்கிருந்த காவலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கூலிப்படையைச் சேர்ந்த சயன் என்பவர் உட்பட சிலர் கைதாகினர்.
கோடநாடு வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்ற முயற்சி நடந்ததாக அப்போது பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட சயனிடம் தமிழகக் காவல்துறை மீண்டும் வி்சாரணை நடத்தியதாகவும் அவர் அளித்துள்ள ரகசிய வாக்குமூலத்தில் பல முக்கிய பிரமுகர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளதாகவும் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.
இதனால் அதிமுக தலைமை கடும் கொந்தளிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுக தலைவர்களைப் பழிவாங்கும் நோக்கத்துடன் திமுக அரசு செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
நேற்று காலை சட்டப்பேரவை கூடியதும், கோடநாடு விவகாரம் தொடர்பாக பேச அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் அனுமதி தர மறுத்தார்.
இதனால் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சிலமுறை எச்சரிக்கை விடுத்த சபாநாயகர், பின்னர் அமளியில் ஈடுபட்டவர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். எனினும் பேரவைக்கு வெளியிலும் அதிமுகவினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி, கோடநாடு கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு முடியும் தறுவாயில் உள்ளது என்றும் இந்நிலையில் தம்மையும் அதிமுகவினர் சிலரையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகிஇருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
"திமுக அரசின் இத்தகைய போக்கை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிர்வரும் 27ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் சூழலில் திமுக அரசு புதிதாக வழக்குப்பதிவு செய்து அச்சுறுத்தப் பார்க்கிறது.
"அதிமுக அரசு நியாயமான முறையில் இந்த வழக்கை விசாரித்தது. கோடநாடு குற்றவாளிகளைக் காப்பாற்ற கடந்த காலங்களில் திமுக முயன்றதை யாரும் மறக்க முடியாது," என்றார் பழனிசாமி.

