சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை சமூக ஆர்வலர்களும் அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் வரவேற்றுள்ளனர்.
தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவின் பகுதிநேர உறுப்பினரான பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் இந்துமதி எம்.நம்பி, மகேஷ்வரி, திருச்சி மண்டல நீர்வளத் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, டிட்கோ நிறுவனத்தின் பொது மேலாளர் கார்த்திகேயன் ஆகிய ஆறு பேர் நிபுணர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு டெல்டா பகுதி விவசாயிகள் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
எனினும் சில பகுதிகளில் இந்தத் திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டத்தால் டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீர், மண்வளம், நீர்ப்பாசன ஆதாரங்கள், பயிர்களின் சாகுபடி, காற்றின் தரம் ஆகியவை எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என அரசுத் தரப்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஏழு பேர் கொண்ட குழு மீத்தேன், ஷெல் எரிவாயு திட்டத்தால் ஏற்படக்கூடிய அனைத்துவித பாதிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, அடுத்த நான்கு மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளது.

